மும்பையில் நடைபெறவுள்ள ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலிக்கு பதிலாக இளம் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் ஐபிஎல் 2026 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடியபோது விராட் கோலிக்கு தசைப்பிடிப்பு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் இந்த ஒருநாள் தொடரிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட அணியில் விராட் கோலி இடம் பெற்றிருந்த நிலையில், வீரர்களின் உடல்நலனைக் கருத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா காயம் காரணமாக பங்கேற்பாரா என்ற சந்தேகம் எழுந்தாலும், அவர் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் இளம் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், இதுவரை 4 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 171 ரன்கள் குவித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 57.00 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 86.80 ஆகவும் உள்ளது. கடந்த டிசம்பர் 2025-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 116* ரன்கள் அடித்து தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இதுவே ஒருநாள் போட்டிகளில் அவரது அதிகபட்ச ஸ்கோராகும். உள்நாட்டு லிஸ்ட்-ஏ கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடியபோது, 17 வயதில் இரட்டைச் சதம் (203 ரன்கள்) அடித்த வீரர் என்ற சாதனையும் ஜெய்ஸ்வால் படைத்துள்ளார்.
இந்தத் தொடருக்கான திருத்தப்பட்ட இந்திய ஒருநாள் அணி விவரம்: ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயஸ் ஐயர் (துணைக் கேப்டன்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, பிரின்ஸ் யாதவ், குர்னூர் பிரார் மற்றும் ஹர்ஷ் துபே ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர்.