ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடும் தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு, தனது டெஸ்ட் அணியில் இடத்தை தக்கவைத்துக் கொள்ள இதுவே கடைசி வாய்ப்பாக அமையும் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் போட்டியில் அவர் சிறப்பாக செயல்படத் தவறினால், டெஸ்ட் அணியிலிருந்து அவர் நீக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
சண்டிகரில் உள்ள புதிய மைதானத்தில் இன்று (ஜூன் 6) ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் சாய் சுதர்சனுக்கு ஆதரவாகப் பேசியிருந்தாலும், இந்தப் போட்டியில் அவர் சோபிக்கத் தவறினால், தேவ்தத் படிக்கல் போன்ற மாற்று வீரர்கள் காத்திருப்பதால் அவருக்கு அடுத்த வாய்ப்பு கிடைப்பது கடினம்.
இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் சாய் சுதர்சனின் செயல்பாடு பெரிய அளவில் ஈர்க்கும்படி இல்லை. அவர் விளையாடியுள்ள 11 இன்னிங்ஸ்களில் வெறும் 2 அரைசதங்கள் மட்டுமே அடித்துள்ளார். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் அறிமுகமான அவர், அங்கு 6 இன்னிங்ஸ்களில் 1 அரைசதமும், வெஸ்ட் இண்டீஸிற்கு எதிராக 3 இன்னிங்ஸ்களில் 1 அரைசதமும் மட்டுமே அடித்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்களிடம் சிக்கி 2 இன்னிங்ஸ்களில் வெறும் 29 ரன்கள் மட்டுமே எடுத்தார். உள்நாட்டில் விளையாடிய 3 டெஸ்ட் போட்டிகளிலும் அவர் சொதப்பியது தேர்வுக்குழுவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் முடிந்த ஐபிஎல் 2026 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக 700 ரன்களுக்கு மேல் குவித்திருந்தாலும், இரண்டு முறை பேட்டின் பிடியை நழுவவிட்டு ஹிட்-விக்கெட்டாகி ஆட்டமிழந்தார். டி20-யில் இருந்து டெஸ்டுக்கு மாறுவது அவருக்கு எளிதாக இருக்காது. இந்தப் போட்டியில் இந்திய அணி இரண்டு முறை பேட்டிங் செய்ய வாய்ப்பு மிகக் குறைவு. எனவே, தனக்குக் கிடைக்கும் அந்த ஒரே இன்னிங்ஸில் 24 வயது சாய் சுதர்சன் பெரிய ஸ்கோர் அடித்தே ஆக வேண்டும். இல்லையெனில், அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கைக்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்படலாம்.