முல்லன்பூரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடுகிறது. இதில், 15 ஆண்டுகளுக்குப் பிறகு ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய இருவரும் இல்லாமல் இந்திய அணி களம் இறங்கியுள்ளது. இதன் மூலம் 69 டெஸ்ட் போட்டிகள் நீடித்த ஒரு சாதனை முடிவுக்கு வந்துள்ளது.
இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இந்த டெஸ்ட் போட்டி முல்லன்பூரில் ஜூன் 6 அன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இந்திய அணியில் இளம் சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதார் தனது சர்வதேச டெஸ்ட் அறிமுகத்தைப் பெற்றார். அவர் குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோருடன் இணைந்து மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக பிளேயிங் லெவனில் இடம் பெற்றார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஜோடி கடந்த பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போட்டிகளில் மிகப்பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தி வந்துள்ளது. ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அஸ்வின் (106 டெஸ்டில் 537 விக்கெட்டுகள்) அனைத்து வகையான இந்திய கிரிக்கெட்டிலிருந்தும் தனது ஓய்வை அறிவித்தார். மற்றொரு நட்சத்திர வீரரான ரவீந்திர ஜடேஜாவுக்கு (89 டெஸ்டில் 348 விக்கெட்டுகள்) இந்த ஆப்கானிஸ்தான் தொடரிலிருந்து முழு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு அஸ்வின், ஜடேஜா என இரு மூத்த சுழற்பந்து வீச்சாளர்களும் இல்லாத இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன்பு கடந்த 2010 ஆம் ஆண்டு நாக்பூரில் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவருமே விளையாடும் லெவனில் இடம்பெறவில்லை. அந்தப் போட்டியில் ஹர்பஜன் சிங் மற்றும் பிரக்யான் ஓஜா ஆகியோர் மட்டுமே சுழற்பந்து வீச்சாளர்களாக விளையாடினர். அதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 198 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதன் பிறகு உள்நாட்டில் நடைபெற்ற 69 டெஸ்ட் போட்டிகளிலும் அஸ்வின் அல்லது ஜடேஜா ஆகிய இருவரில் ஒருவராவது விளையாடும் லெவனில் நிச்சயம் இடம்பெற்றிருந்தனர். இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் 2018 ஆம் ஆண்டிற்குப் பிறகு தற்போதுதான் முதன்முதலாக டெஸ்ட் போட்டியில் நேருக்கு நேர் மோதுகின்றன. இப்போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் கீழ் வராது என்றாலும், இந்திய அணிக்கு தங்களது வீரர்களின் திறனை பரிசோதிக்க நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.