பிரபல தமிழ் சினிமா நடிகர் ரவி மோகன், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முருகனின் அறுபடை வீடுகளில் முக்கியமானதுமான பழனி முருகன் கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார். ஜெயம், தனி ஒருவன், பொன்னியின் செல்வன் போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர் ரவி மோகன். சமீபத்தில் வெளியான பராசக்தி திரைப்படத்தில் வில்லனாக நடித்த இவரது நடிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றது.
தனிப்பட்ட வாழ்க்கையில், கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கோரி நடிகர் ரவி மோகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இறுதி தீர்ப்புக்காக நிலுவையில் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், தனது மனைவி ஆர்த்தி, மாமியார் சுஜாதா மற்றும் நடிகை குஷ்பு ஆகியோர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும், தனது குழந்தைகளை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்றும், விவாகரத்து கிடைக்கும் வரை படங்களில் நடிக்கப் போவதில்லை என்றும், இதுவரை நடித்த படங்களையும் வெளியிடப் போவதில்லை என்றும் அவர் கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகள் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த சூழலில், நடிகர் ரவி மோகன் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து 41 நாட்கள் விரதத்தை தொடங்கியுள்ளார். ஜூலை மாத தொடக்கத்தில் அவர் சபரிமலைக்கு சென்று வழிபாடு நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விரதத்தின் ஒரு பகுதியாக, அவர் பழனி முருகன் கோவிலுக்கு நேற்று வருகை தந்தார்.
பழனி அடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற ரவி மோகன், உச்சிக்கால பூஜையில் கலந்துகொண்டு முருகப்பெருமானை மனமுருக தரிசனம் செய்தார். தொடர்ந்து, போகர் சன்னதி, ஆனந்த விநாயகர் சன்னதி உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார். அவரை கண்ட பக்தர்கள் சிலர் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.