அதிமுகவில் இருந்து விலகி, தவெகவில் இணைந்த எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்கக்கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி பிரபாகரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை தொகுதிகளைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதைத் தொடர்ந்து அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையாவும் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தார். இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் ஜே.சி.டி பிரபாகரை சந்தித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஓ.எஸ். மணியன், இன்பதுரை உள்ளிட்டோர், ராஜினாமா செய்த எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்கக்கூடாது என்று மனு அளித்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கடந்த 13-ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த 25 உறுப்பினர்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பழனிசாமி கடிதம் அளித்திருந்தார். அந்த கடிதம் பரிசீலனையில் இருக்கும்போதே, கட்சி தாவல் தடைச் சட்டத்தின் அச்சத்தால் மூன்று எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரிய கடிதம் ஆய்வில் இருக்கும்போது, அவர்களின் ராஜினாமாவை பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டது விதிகளுக்கும் சட்டத்துக்கும் முரணானது. எனவே, அவர்களின் ராஜினாமாவை ஏற்கக்கூடாது என மனு அளித்துள்ளோம். காலையில் ராஜினாமா செய்தவர்களுக்கு 5 நிமிடங்களில் கட்சியில் சேர்த்து உறுப்பினர் அட்டை வழங்கப்படுகிறது. இது தலைமைச் செயலகமா அல்லது தவெக கட்சி அலுவலகமா எனத் தெரியவில்லை. இந்த அரசு குதிரைப் பேரத்தை குதிரை வேகத்தில் நடத்துவதாக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கூறுகின்றனர். தூய்மையான ஆட்சியை தருவதாக கூறிய முதலமைச்சர், முறைகேடாக பின்வாசல் வழியாக தனது ஆட்சியை நிலைநிறுத்த குதிரைப் பேரத்தை குதிரை வேகத்தில் நடத்துகிறார். ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தவறை உணர்ந்து, பொதுச் செயலாளரிடம் மன்னிப்பு கோரி, பழனிசாமி தலைமையையும் ஏற்றுக்கொள்வதாக கடிதம் அளித்துள்ளனர். ராஜினாமா செய்த உறுப்பினர்கள் கட்சி கட்டுப்பாட்டை மீறி குதிரை பேரத்தில் ஈடுபட்டு பதவியை ராஜினாமா செய்துள்ளனர் என்பதே உண்மை.
இன்பதுரை மேலும் கூறுகையில், கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்த பிறகும், அதை மீறி பேரவைத் தலைவர் எப்படி ராஜினாமாவை ஏற்க முடியும்? அறிவிப்பு வந்த பிறகுதான் ராஜினாமா செல்லுபடியாகும். அறிவிப்பு வருவதற்கு முன்பே அவர்கள் மற்றொரு கட்சியில் சேர்ந்துள்ளனர். அப்படி இருக்கும்போது அந்த ராஜினாமாவை ஏற்கக்கூடாது. சட்டப்பேரவை தலைவரின் நடவடிக்கையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று அவர்கள் பொய்யாக நம்புகிறார்கள். இது தவறு. எந்த அரசாணை வெளியிட்டாலும் அதை திரும்பப் பெறும் அதிகாரம் இருக்கிறது என்றார்.