தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் நடிகர் அதர்வா, 'பாணா காத்தாடி', 'பரதேசி', 'சண்டிவீரன்' போன்ற வெற்றிப் படங்களின் மூலம் ரசிகர்களின் மனங்களை வென்றவர். சமீபத்தில் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான 'பராசக்தி' படத்திலும் தனது நடிப்பால் பாராட்டுகளைப் பெற்றார்.
தற்போது, ஆகாஷ் பாஸ்கர் இயக்கத்தில் 'இதயம் முரளி' என்ற புதிய திரைப்படத்தில் அதர்வா நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அதர்வாவுடன் இணைந்து பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நட்ராஜ், ரக்சன், தமன், நிஹாரிகா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், அதர்வா மற்றும் பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள 'இதயம் முரளி' திரைப்படம் வரும் ஜூலை 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, மறைந்த பிரபல நடிகர் முரளி, தனது ரசிகர்களால் அன்புடன் 'இதயம் முரளி' என்று அழைக்கப்பட்டார். அந்தப் பெயரையே தனது மகனின் படத்திற்கு சூட்டியிருப்பது, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், ஒருவித உணர்வுப்பூர்வமான பிணைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.