தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான சூர்யா மற்றும் திரிஷா நடிப்பில், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான 'கருப்பு' திரைப்படம், கடந்த 15ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தத் திரைப்படம், வெளியான முதல் 10 நாட்களிலேயே தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ரூ.130 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
'கருப்பு' திரைப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்க, சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படம், சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.
தமிழக திரையரங்குகளில் 'கருப்பு' திரைப்படம் திருவிழா கோலம் பூண்டுள்ளது. விடுமுறை நாட்கள் மட்டுமின்றி, வேலை நாட்களிலும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. ஏற்கனவே, உலகளவில் ரூ.220 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், நடிகர் சூர்யாவின் திரை வாழ்க்கையில் திரையரங்குகள் மூலம் மட்டும் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்த முதல் படமாக 'கருப்பு' திகழ்கிறது.
தற்போது, தமிழ்நாட்டில் ரூ.130 கோடி வசூலைத் தாண்டியுள்ள 'கருப்பு' திரைப்படம், விரைவில் ரூ.300 கோடி வசூல் எல்லையைத் தாண்டி, சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகச்சிறந்த வசூல் சாதனை படைத்த படமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. படக்குழு இந்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.