தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இந்த மழைக்கான சூழல் உருவாகியுள்ளது.
குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கனமழை பெய்யக்கூடும். மேலும், தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகபட்ச வெப்பநிலையைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்காது என்றும், ஓரிரு இடங்களில் இயல்பை விட 2° செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸ் வரையிலும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இன்று (25-05-2026) தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகள், தென்மேற்கு மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள், கேரளம்-கர்நாடகா கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.