நடப்பு ஐபிஎல் 2026 சீசனின் 68வது லீக் ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, கேப்டன் ரிஷப் பண்ட்டின் மெதுவான ஆட்டம் ஒருபுறம் இருந்தாலும், ஜோஷ் இங்லிஸ் மற்றும் ஆயுஷ் பதோனியின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் என்ற சவாலான ஸ்கோரை எட்டியுள்ளது.
லக்னோவின் ஏகானா மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்த முடிவு தொடக்கத்தில் பஞ்சாபிற்கு சாதகமாக அமைந்தது. லக்னோ அணி தனது தொடக்க வீரர்களை விரைவிலேயே இழந்தது. அர்ஷின் குல்கர்னி ரன் ஏதும் எடுக்காமலும், நட்சத்திர வீரர் நிக்கோலஸ் பூரன் வெறும் 2 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர். இதனால், வெறும் 20 ரன்களுக்குள் 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்து லக்னோ அணி தடுமாற்றத்திற்கு உள்ளானது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், ஜோஷ் இங்லிஸ் மற்றும் ஆயுஷ் பதோனி இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடினர். ஆயுஷ் பதோனி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, வெறும் 18 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 43 ரன்களை விளாசி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். மறுபுறம், பொறுப்புடன் விளையாடிய ஜோஷ் இங்லிஸ் 44 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 72 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இவர்களின் அபாரமான பார்ட்னர்ஷிப் லக்னோ அணியை சரிவிலிருந்து மீட்டு, பெரிய ஸ்கோரை நோக்கி நகர்த்தியது.
அணியின் மற்ற பேட்ஸ்மேன்கள் 160 முதல் 230 வரையிலான ஸ்டிரைக் ரேட்டில் ரன் குவித்த நிலையில், கேப்டன் ரிஷப் பண்ட் மட்டும் இந்தப் போட்டியிலும் ரன் குவிக்கத் திணறினார். அவர் 22 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார். யுஸ்வேந்திர சாகல் பந்துவீச்சில் ஆட்டமிழந்த பண்ட்டின் ஸ்டிரைக் ரேட் 118.18 ஆக இருந்தது. இது லக்னோவின் ரன் வேகத்தை வெகுவாகக் குறைத்தது. குறிப்பாக, அதிரடியாக ஆட வேண்டிய மிடில் ஓவர்களில் பண்ட் ஆமை வேகத்தில் ஆடியது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. கடைசி நேரத்தில் அப்துல் சமத் 20 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஸ்கோரை உயர்த்த உதவினார். இதன் மூலம் லக்னோ அணி 196 ரன்களை எட்டியது. பிளே-ஆப் வாய்ப்பைத் தக்கவைக்க 197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பஞ்சாப் அணி அடுத்து களமிறங்கியது.