கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோருடன் வசித்து வந்த சிறுமி, கடைக்குச் சென்றபோது காணாமல் போன நிலையில், பின்னர் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.
சிறுமி கடைக்குச் சென்றிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் கடத்திச் செல்லப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறை கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, சிறுமி கடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டது. சில மணி நேர தேடலுக்குப் பிறகு, கண்ணம்பாளையம் குளத்தின் அருகே உள்ள முட்புதரில் சிறுமியின் உடல் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை அதிகாரிகள், சிறுமியின் உடலை மீட்டனர். மேற்கு மண்டல ஐ.ஜி. ரம்யாபாரதி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கடத்தப்பட்ட சிறுமி கொலை செய்யப்பட்டு, பின்னர் உடல் மறைக்கப்பட்டதை விசாரணையில் கண்டறிந்தனர். உடற்கூறு ஆய்விற்காக சிறுமியின் உடல் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தில், 'கோவை – சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக கடந்த சில வாரங்களாக தொடரும் வன்முறைச் சம்பவங்கள் மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. புதிய அரசு மெத்தனமாக செயல்படாமல் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.