தங்க இறக்குமதி வரி உயர்வு: மத்திய அரசுக்கு செல்வபெருந்தகை கண்டனம்

தங்கம் மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இந்த திடீர் வரி உயர்விற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒருபுறம் விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்படும் நிலையில், மறுபுறம் வரி விதிப்பை உயர்த்தி பொதுமக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் மத்திய அரசின் செயல்பாடு கண்டிக்கத்தக்கது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, 'தங்கம் வாங்குவதைக் குறைத்துக் கொள்ளுங்கள்' என்று அறிவுறுத்திய சில நாட்களிலேயே, தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரியை 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை மேலும் சுமையாக்கும் செயல் என செல்வபெருந்தகை தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ளார். தங்கம் என்பது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுபூர்வமான விஷயம் என்றும், குடும்பங்களின் பாதுகாப்பான சேமிப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே அதிகரித்து வரும் விலைவாசி உயர்வால் மக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில், இந்த வரி உயர்வு மக்களின் சேமிப்பையும், குறிப்பாக பெண்களின் எதிர்கால நம்பிக்கையையும் சுரண்டும் செயல் என அவர் விமர்சித்துள்ளார். ஒன்றிய பா.ஜ.க அரசின் இந்த முடிவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியால் ஏற்கனவே துன்புறும் மக்களின் நிலையை உணர்ந்து, இந்த சுங்கவரி உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை செல்வபெருந்தகை வலியுறுத்தியுள்ளார். மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இதுபோன்ற முடிவுகள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version