10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் புதிய நுழைவுத் தேர்வு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகம்

மருத்துவக் கல்வித் துறையில் புதிய மாற்றங்களை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இனி 10 ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கும் 'நீட் – ப்ரீ ஆயுர்வேதா' என்ற புதிய நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகம், 2026-27 கல்வியாண்டிற்கான ஆயுர்வேத முன் படிப்பில் சேர்வதற்கு இந்த தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு – ஆயுர்வேத முன் படிப்பு (NEET-PA) நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இந்தத் தேர்வுக்கான பதிவு செயல்முறை வரும் ஜூலை மாதத்தின் மூன்றாவது வாரத்தில் தொடங்கும்.

புதுடெல்லியில் உள்ள மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையம் இணைந்து, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்காக ‘நீட்-பிஏ’ (நீட் – ப்ரீ ஆயுர்வேதா) என்ற புதிய நுழைவுத் தேர்வை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டத்தின்படி, தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் முதலில் இரண்டு ஆண்டுகள் ‘ப்ரீ-ஆயுர்வேதா’ என்ற அடிப்படைப் படிப்பைப் பயில்வார்கள். இது மேல்நிலைக் கல்விக்கு இணையானதாகக் கருதப்படுகிறது. இந்தப் படிப்பை முடித்த பிறகு, நான்கரை ஆண்டுகள் பி.ஏ.எம்.எஸ் மருத்துவப் படிப்பும், இறுதியாக ஒரு ஆண்டு கால மருத்துவமனைப் பயிற்சியும் என மொத்தம் ஏழரை ஆண்டுகளில் மாணவர்கள் ஆயுர்வேத மருத்துவர் பட்டத்தைப் பெற முடியும்.

இந்த 'நேஷனல் எலிஜிபிலிட்டி-கம்-என்ட்ரன்ஸ் டெஸ்ட் – ப்ரீ-ஆயுர்வேதா’ (நீட்-பிஏ) நுழைவுத் தேர்வில் பங்கேற்க, அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பிக்கும் மாணவர்கள் 2026-ம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதியன்று 15 வயது பூர்த்தியடைந்தவராகவும் 25 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இத்தேர்வு சமஸ்கிருதம், அறிவியல் மற்றும் ஆயுர்வேதம் ஆகிய மூன்று முக்கியப் பிரிவுகளில் இருந்து கேள்விகளைக் கொண்டிருக்கும்.

தேர்வில் தேர்ச்சி பெற பொதுப் பிரிவினர் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களையும், எஸ்.சி, எஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் 40 சதவீத மதிப்பெண்களையும் பெற வேண்டியது அவசியமாகும். இப்புதிய திட்டத்திற்கான நுழைவுத் தேர்வுகள் 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் 30 அல்லது செப்டம்பர் 6 ஆகிய தேதிகளில் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் இதர வழிகாட்டுதல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய விரும்பும் மாணவர்கள் புதுடெல்லி ஜனக்புரியில் உள்ள மத்திய சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.sanskrit.nic.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடுகள் செய்து வருவதாகவும், அதன் வளர்ச்சிக்கான ஒரு வடிவமாகவும் இந்த தேர்வு பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

நாடு முழுவதும் ஏற்கனவே நீட் தேர்வால் மருத்துவக் கல்வி மாநிலங்களின் கைகளை விட்டுச் சென்றுவிட்ட நிலையில், தற்போது சமஸ்கிருதம் மற்றும் 10-ஆம் வகுப்பு அளவிலான நுழைவுத் தேர்வு என்ற பெயரில் கொண்டு வரப்படும் இந்த மாற்றங்கள் கல்வித் துறையில் சர்ச்சைகளையும், மேலும் பல சிக்கல்களையும் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, சமஸ்கிருதம் பயில்பவர்களுக்கு மட்டுமே இத்தகைய வாய்ப்புகள் கிடைக்கும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாக ஒரு சர்ச்சையும் எழுந்துள்ளது.

நீட்- பிஏ தேர்வு என்பது 10-ம் வகுப்பு முடித்தவுடன் ‘ஆயுர்வேத குருகுலங்களில்’ சேர விரும்புவோருக்கு மட்டுமேயானது. ஒருவேளை இது கடினமாகத் தோன்றினால், மாணவர்கள் வழக்கம்போல 11, 12-ம் வகுப்புகளில் அறிவியல் பாடங்களை எடுத்துப் படித்துவிட்டு, பின்னர் நீட் யுஜி தேர்வு எழுதி மற்ற மருத்துவக் கல்லூரிகளில் பிஏஎம்எஸ் படிப்பில் சேரலாம். அங்குக் கல்விக் காலத்திலேயே சமஸ்கிருதம் ஒரு பாடமாகத் தனியாகக் கற்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தேர்வு மொத்தம் 7.5 ஆண்டுகளைக் கொண்டது. இதில் 2 ஆண்டுகள் முன்-படிப்பு (Pre-Ayurveda), 4.5 ஆண்டுகள் இளநிலை படிப்பு (B.A.M.S) மற்றும் 1 ஆண்டு கட்டாயப் பயிற்சி (Internship) ஆகியவை அடங்கும். இத்தேர்வு 150 நிமிடங்கள் (இரண்டரை மணி நேரம்) நடைபெறும். இது ஓஎம்ஆர் தாள் அடிப்படையிலான ‘ஆப்லைன்’ தேர்வாகும். மொத்தம் 120 கொள்குறி வகை வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண் வீதம் மொத்தம் 120 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான பதில்களுக்கு கழித்தல் மதிப்பெண்கள் கிடையாது. மாணவர்கள் தங்களின் வசதிக்கேற்ப சமஸ்கிருதம், ஹிந்தி அல்லது ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து எழுதலாம்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version