கோபிசெட்டிபாளையம் அருகே, தடுப்பூசி செலுத்தப்பட்ட 10 மாத ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கீழ்வாணியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சரோஜினி தம்பதியினரின் குழந்தைக்கு நேற்று காலை வழக்கமான 9 மாதத்திற்கான தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்கிடையில், மேலும் ஒரு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் கூறியதாகக் கூறப்படுகிறது. இதனால், ஒரே நாளில் அந்தக் குழந்தைக்கு இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீட்டிற்கு வந்த பிறகு, குழந்தை நன்றாக விளையாடிக் கொண்டிருந்ததாகவும், ஆனால் இரவு தூங்கச் சென்றபோது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும் பெற்றோர் வேதனையுடன் தெரிவித்தனர். விடியற்காலையில், குழந்தை பேச்சு மற்றும் மூச்சு இல்லாமல் இருந்ததை அவர்கள் கண்டனர். உடனடியாக, குழந்தையை கோபிச்செட்டிப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஒரே நாளில் இரண்டு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதன் காரணமாகவே குழந்தை உயிரிழந்ததா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பெற்றோரின் கண்ணீர் கதறல் அனைவரையும் கலங்கச் செய்துள்ளது.
மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள், குழந்தையின் பெற்றோர் கூறிய தகவல்களின் அடிப்படையில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். தடுப்பூசி செலுத்தும் நடைமுறைகள் மற்றும் அதன் பின்னணி குறித்து விரிவாக ஆராயப்பட்டு வருகிறது. குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே, உயிரிழப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சம்பவம், தடுப்பூசி குறித்த அச்சத்தையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

